விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் அருகே இருக்கும் அரசு உயர்நிலை பள்ளியில் சகலகலாதரன்(59) என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தலைமை ஆசிரியரின் அறைக்கு 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி நோட்டு வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சகலகலாதரன் மாணவியின் கையை பிடித்து சாக்லேட் கொடுத்துள்ளார். அதை மாணவி வாங்க மறுத்தார்.

அப்போது வற்புறுத்தி சகலகலாதரன் சாக்லேட்டை மாணவியின் சீருடையில் இருக்கும் பாக்கெட்டில் வைத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி வீட்டுக்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை அறிந்த மாணவியின் உறவினர்களும், கிராம மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். இதற்கிடையே ரோசனை போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று தலைமை ஆசிரியரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு நின்ற பொதுமக்கள் சகலகலாதரனுக்கு தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் பொதுமக்களின் பிடியிலிருந்து மீட்டு பலத்த பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து மாணவியின் தாய் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சகலகலாதனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.