கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன் பாளையத்தில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சலிங்கம் என்ற மகன் இருக்கிறார். கடந்த 22-ஆம் தேதி டிப்பர் லாரியை நிறுத்துவது சம்பந்தமாக பஞ்சலிங்கத்திற்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயபிரகாஷ், அவரது தாய் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெயபிரகாஷ் சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது சுல்தான்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மீது புகார் வந்ததால் விசாரிக்க வேண்டியுள்ளது.

உடனே காவல் நிலையத்திற்கு வாருங்கள் என கூறியுள்ளார். பின்னர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து பஞ்சலிங்கம் மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவிச்சந்திரனை கையும், களவுமாக பிடித்தனர். இந்நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.