மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பிரகலாத் சிங் படேல் என்பவர் உள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் மத்திய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் வீராங்கனை ராணி அவந்திபாய் லோதியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் அரசாங்கத்திடம் பிச்சை எடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டுள்ளனர். அவர்கள் தலைவர்களை சந்திக்கும் போது ஒரு கூடை நிறைய மனுவைக் கொண்டு வருகின்றனர். மேடையில் மாலையை அணிவித்துவிட்டு, அதோடு ஒரு மனுவையும் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இது நல்ல பழக்கம் கிடையாது.

கேட்பதற்கு பதிலாக கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். அதோடு பண்பட்ட சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நாம் எந்த அளவுக்கு இலவசங்களுக்கு பழகிக் கொள்கிறோமோ, அந்த அளவுக்கு தியாகிகளை கொச்சைப்படுத்துகிறோம் என்று தான் அர்த்தம்.

ஒரு தியாகிக்கு செய்யும் உண்மையான மரியாதை என்னவென்று தெரியுமா? அவரது கொள்கையை பின்பற்றுவதுதான். பிச்சை எடுத்து ஒரு தியாகியின் பெயரை கூற முடியுமா? கலாச்சாரம் மிக்க சமுதாயத்தையும் உருவாக்குவீர்கள். பிச்சைக்காரர் படையை ஒன்று திரட்டுவது சமுதாயத்தை பலப்படுத்தாது பலவீனப்படுத்தும் என்று கூறினார். இவரது பேச்சு பொதுமக்களை அவமதிக்கும் வகையில் உள்ளதால் கடும் விவாதம் எழுந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பினை முன்வைத்து வருகின்றனர்.