தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொப்பிடி கிராமத்தில் முருகன்-மணிமேகலை தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் மூத்த மகள் மகாலட்சுமி 12-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தர்மபுரியில் இருக்கும் தனியார் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த சிறுமியின் அண்ணன் முறையான நவீன் குமார் என்பவர் தர்மபுரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்துள்ளார்.

இதனால் நவீன் குமாரும், மகாலட்சுமியும் ஒன்றாக தர்மபுரிக்கு சென்று வந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நவீன் குமார் திடீரென விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனையடுத்து நவீன் குமாரின் பெற்றோர் அவர் விஷம் குடித்ததற்கான காரணம் குறித்து மகாலட்சுமியிடம் அடிக்கடி கேட்டுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மகாலட்சுமி கடந்த 3- ஆம் தேதி விஷ மருந்தை தின்று யாரிடமும் அதைப்பற்றி கூறவில்லை. இதனையடுத்து 2 நாட்கள் கழித்து மயங்கி விழுந்த மகாலட்சுமியை குடும்பத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.