சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோனிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கபடி வீரரான மோனிகா பள்ளியில் இருக்கும் கபடி அணியில் இடம் பெற்றுள்ளார். இதனையடுத்து மோனிகா பள்ளிக்கு செல்போன் கொண்டு சென்றதால் ஆசிரியர்கள் அவரை கண்டித்தனர். மேலும் பெற்றோரையும் பள்ளிக்கு அழைத்து எச்சரித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் மோனிகா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.