
பஞ்சாபில் 2024-25 ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கபடி வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்தப் போட்டி தொடரில் அன்னை தெரசா பல்கலைக்கழகம், பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டிகள் நடந்தது. அப்போது பீகாரை சேர்ந்த வீராங்கனை பவுல் பிளே செய்ததாக தமிழக வீராங்கனை நடுவரிடம் புகார் அளித்தார். இதனால் தமிழக வீராங்கனை மற்றும் நடுவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நடுவர் அந்த தமிழக வீராங்கனை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் பல்கலைக்கழக மாணவிகள் வந்துள்ளனர். இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் விளையாட்டு களம் பரபரப்பானது.
இந்த சம்பவத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கபடி வீராங்கனைகள் பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திலேயே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்யப்பட்டதாக கூறும் தகவல் தவறு என்றும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.