கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை உண்டானாகுழி பகுதியில் தோமஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அறுமணையில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தோமஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் தோமஸ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து தோமஸ் சர்க்கரை மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தோமஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.