
தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே பொட்டிபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராமராஜ் (35). தோட்ட தொழிலாளியான இவருக்கு மனைவி வீரமணி (28) மற்றும் ராஜபாண்டி (5) என்ற மகனும், ஈஷா (3), ஜீவிதா (2) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி நேற்று காலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் வேலைக்கு சென்ற பின், விரக்தியடைந்த வீரமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் தான் இறந்து விட்டால் தனது குழந்தைகள் அனாதைகள் ஆகி விடுவார்கள் கருதி, ஒரு திட்டம் போட்டார். அதன்படி நேற்று மாலை வீரமணி, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு 200 மீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு வந்துள்ளார். அதன் பின் மனதை கல்லாக்கி கொண்ட வீரமணி அங்குள்ள கிணற்றுக்குள் தனது குழந்தைகளை தள்ளி விட்டு, பின் அவரும் கிணற்றிற்குள் குதித்தார்.
இதனையடுத்து தண்ணீர் இல்லாமல் பாழடைந்து காணப்பட்ட அந்த கிணற்றில் 70 அடி ஆழம் இருக்கும். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ராமராஜிக்கு தெரிவித்தவுடன் அங்கு வந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல், மனைவி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அவரும் கிணற்றுக்குள் குதித்துள்ளார். இதன் பின் இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், ராட்சத ஏணி மூலம் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் கிணற்றுக்குள் கூண்டு வலைகள், கயிற்றை வீசி மீட்பு பணியில் ஈடுபட்ட போது, ராமராஜ், வீரமணி மற்றும் அவர்களது 3 குழந்தைகளையும் மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜீவிதா, ஈஷா என்ற இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். பின் ராமராஜ், வீரமணி மற்றும் ராஜபாண்டி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.