
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வர வேண்டும்.
இப்படி வந்தால்தான் ஊரில் இருந்து வெளியே வர முடியும் என்பதால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கலெக்டர், மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி.யிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, மேம்பாலம் கட்டுவதற்காக நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பின் இதற்கான பணிகளை மு.பெ.கிரி எம்.எல்.ஏ., சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல் ரகுப், ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.