
அதிக அளவில் தங்க சுரங்கங்கள் உள்ள இடமாக தென்னாப்பிரிக்கா திகழ்கின்றது. இங்கு தங்கத்தை வெட்டி எடுத்த பின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும். அவ்வாறு கைவிடப்பட்ட சுரங்கங்கள் ஏராளமானவைகள் உள்ளன. அதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள மிகவும் ஆழமான தங்க சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த சுரங்கம் சுமார் 2.5 கிலோமீட்டர் ஆழம் கொண்டதாகும். இப்பகுதியில் சட்ட விரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் இருக்கின்றதா என தேடுதல் பணியில் ஈடுபடுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து சுமார் 2000 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர்.
இவர்களில் பலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால் பலர் சுரங்கத்திலேயே தங்கி இருந்துள்ளனர். இந்நிலையில் அங்கு தங்கியிருந்தவர்களை குற்றவாளிகள் என காவல்துறையினர் அறிவித்ததால் அங்கிருந்து வெளியேறியவர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைதுக்கு பயந்து பலர் உள்ளேயே இருந்துள்ளனர். அவர்கள் வெளியேற்றுவதற்காக சுரங்கத்திற்குள் உணவுப் பொருள்கள் அனுப்பப்படுவதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கிருந்து இறந்து போன 78 பேர் உடல்களை கண்டெடுத்துள்ளனர். இதில் ஏற்கனவே 9 உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் மொத்தம் 87 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை எடுத்து காவல்துறையினர் தரப்பில் மீட்பு பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் சுரங்கத்தில் யாரும் இல்லை எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர். அதே வேளையில் காவல்துறையினர் உணவுப்பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்து இருக்கலாம். இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சுங்க தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.