திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்ன மூலைக்கரைபட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சிட்லபாக்கத்தில் நாட்டு மருந்து கடை நடத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முருகேசன் மூன்று பேருடன் குற்றாலத்திற்கு வந்துள்ளார். பின்னர் முருகேசன் உட்பட 4 பேரும் குற்றாலம் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று முன்தினம் காலை முருகேசன் உட்பட இரண்டு பேர் மசாஜ் செய்துவிட்டு வருவதாக கூறி வெளியே சென்று விட்டு மீண்டும் அறைக்கு வந்தனர்.

பின்னர் மதியம் அறையில் இரண்டு பேர் சாப்பாடு வாங்கி வருவதற்காக சென்றனர். அவர்கள் சாப்பாடு வாங்கிக்கொண்டு அறைக்கு வந்த போது முருகேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடன் இருந்தவரை காணவில்லை இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முருகேசனை சரமாரியாக வெட்டி கொலை செய்த மற்றொரு நபரை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் தான் முருகேசன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.