சென்னையில் கடந்த சனிக்கிழமை அன்று 48வது புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி சீமான் கலந்து கொண்டு பேசியதும், பாண்டிச்சேரியின் தமிழ் தாய் வாழ்த்து ஒளிபரப்பானதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பபாசி அமைப்பு தங்களுக்கும், சீமோன் பேசியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் டிஸ்கவரி பதிப்பகம் இது குறித்து விளக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, கடந்த 4ம் தேதி அன்று சென்னை புத்தகக் காட்சியில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களை நூலாசிரியரின் பரிந்துரையின் பெயரில் பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து அதற்கான அரங்கம் அமைத்துக் கொடுத்தோம்.

அரசியல் தாக்குதல் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசக்கூடாது என்று அறிவுறுத்தலுடன் அரசியல் பாரபட்சமற்று பபாசி அமைப்பும் இதற்கான அனுமதியை வழங்கியது. பபாசி அமைப்பின் ஒரு உறுப்பினர் மற்றும் அதன் செயற்குழுவில் செயலாற்றியவன் என்ற முறையில் எனக்குள்ள பொறுப்புடன் சீமான் அவர்களிடமும் இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது. விழா தொடங்கிய அன்று மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் அவர்கள் பார்த்துக் கொண்டார். சீமோன் அவர்களின் விருப்பத்தின் பெயரில் பாரதிதாசன் அவர்களின் வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே மாண்புகழ் நீயே என் தமிழ் தாயே என்ற பாடல் ஒளிபரப்பப்பட்டது. பாரதிதாசன் பாடல் என்பதால் நானும் அதை இயல்பாக எடுத்துக் கொண்டேன்.

அது பாண்டிச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்றோ இதன் மூலம் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுகிறது என்ற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது எனது அறியாமையே.  அதற்காக நான் வருந்துகிறேன் அதோடு திரு சீமான் அவர்கள் நல்லதொரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்து பேசிய கருத்துக்கள் எனக்கோ எங்களின் பபாசி அமைப்பிற்கோ விருப்பம் இல்லாதது நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை. பொதுமேடையில் சீமோன் அவர்களின் உரையில் குறிப்பிடுவது நாகரிகமாக இருக்காது என்பதால் அனைவரும் அமைதி காத்தோம். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம்.

டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் பதிப்பகம் கடந்த 15 ஆண்டுகளாக சென்னையின் இலக்கிய அடையாளங்களில் ஒன்றாக கலைஞர் கருணாநிதி நகரில் செயல்பட்டு வருகிறது. அரசியல் சார்பற்ற வாசிப்பவை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எல்லா வகையான இலக்கியங்களையும் வெளியிட்டு வருகிறோம். எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்திற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்காமல் ஒட்டுமொத்தமாக எங்களின் இலக்கிய செயல்பாடுகளை முடக்குவதற்கு திட்டமிடுவது வருந்தத்தக்கது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள உறுதி அளிக்கிறோம் என்று தனது விளக்கத்தை வெளியிட்டுள்ளது.