அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோக்கொடி கிராமத்தில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா(48) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இதய நோய் காரணமாக சரோஜாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால் சரோஜாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் சரோஜாவுக்கு இதயம் பலவீனமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சரோஜா தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரோஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.